“மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று பரப்புவது திமுகவின் நாடகம். மத்திய அரசு அனுப்பிய கடிதம் வழக்கமான நடைமுறைதான்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “2026 தேர்தலில் மதுரை மக்களை ஏமாற்றி வாக்கை பெற வேண்டும் என்பதற்காக மெட்ரோ திட்டத்திற்காக திமுக போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவிதமான திட்டங்களையும் மதுரை மக்களுக்கு திமுக அரசு கொண்டு வரவில்லை.
மதுரை மக்களுக்கு நல்லதைச் செய்தது அதிமுகதான், எடப்பாடி பழனிசாமி எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல பணிகளை மேற்கொண்டார். எந்நேரமும் மதுரை மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், திமுக அரசு தற்போது வரை அதைக் கொண்டு வரவில்லை.
ஒரு ஆளும்கட்சி நடத்துகிற ஆர்ப்பாட்டத்தில் 2,500 பேர் இருக்கிறார்கள். மூன்று மாவட்ட அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டதில் இவ்வள்வு பேர்தான் வந்திருக்கிறார்கள்.
திமுக அரசு, மெட்ரோ குறித்து பேசுகின்ற வாதம் தப்பானது, மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று பரப்புவது திமுகவின் நாடகம். மத்திய அரசு அனுப்பிய கடிதம் வழக்கமான நடைமுறைதான்.