சென்னை: 2026 பேரவைத் தேர்தல் விஜய்க்கு, அரசியல், தேர்தல் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் என்றும், விஜய்க்கு திருச்சியில் வந்த கூட்டம் நாகையில் வரவில்லை, சினிமாவில் கைத்தட்ட உதவும் வசனம்போல் அவர் மக்கள் மத்தியில் பேசுகிறார், அவருக்கு அரசியல் தெரியவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த எஸ்.வி. வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி. வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் எஸ்.வி.வெங்கடராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் எஸ்.வி.வெங்கடராமன் மகனும், நடிகருமான எஸ்.வி.சேகர் பேசியதாவது:
என்னுடைய நாடகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை சேர்ந்து எங்களை பாராட்டினார். அப்போது எனது தந்தையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
எனது தந்தைக்கு முதல்வர் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும் எனது தந்தை 86 ஆயிரம் யூனிட் ரத்தம் கொடுத்துள்ளார். பல சமூக சேவைகளை செய்துள்ளார். அதனால் எங்கள் தந்தை வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று முதல்வர் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
எங்கள் குடும்பத்திற்கு இது வாழ்நாள் கௌரவமாக உள்ளது. பொதுவாக திமுக குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என பேசுவார்கள். ஆனால் அது அரசியலுக்காக பேசப்படும் வார்த்தை என கூறினார்.
எல்லோருக்குமான முதல்வர் என எப்போது கூற ஆரம்பித்தார்களோ அப்போது இருந்தே அவர் அப்படித்தான் உள்ளார். அனைத்து சமூகத்தின் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.