2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் திடல் வட்டாரத்தில் விரிவாக விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர், “வட மாவட்டங்கள் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுக்கவே கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறார் திருமா. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 2023 செப்டம்பரில், 88 ஆக இருந்த மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை 144 ஆக உயர்த்தினார். அதிலும் வன்னியர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு தலா 10% ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக மீண்டும் கட்சி மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் எங்கள் தலைவர்” என்றனர்.

தொடர்ந்து பேசியவர்கள், “ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே 2-3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ-க்கள் என்றிருந்த நிலையை 144 மா.செ-க்கள் உள்ள நிலையில் கூடுதலாக 90 மா.செ-க்களை நியமித்து டிசம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம்.