டெல்லி அருகில் உள்ள காஜியாபாத்தில் நேற்று காலை சகோதரிகளான நிஷிகா(16), பிராச்சி(14), பாகி(12) ஆகியோர் தாங்கள் வசித்து வந்த குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் 3 பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொரிய ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதோடு கொரிய நாடகங்களையும் மொபைல் போனில் பார்த்து பொழுதைக் கழித்தனர். மூவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடன் தொல்லை, திருமண மிரட்டல்
விசாரணையில் சகோதரிகளின் தந்தை சேதன் குமாருக்கு ரூ.2 கோடி அளவுக்கு கடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதோடு அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் தனது மகள்கள் பயன்படுத்தி வந்த மொபைல் போனை பிடுங்கி அதில் அவர்களின் ஐ.டியை டெலிட் செய்துவிட்டு, அந்த போனை விற்பனை செய்துள்ளார். அதில் கிடைத்த பணத்தில் 800 ரூபாய்க்கு மின் கட்டணம் செலுத்தியிருக்கிறார். அதோடு தொடர்ந்து மொபைல் விளையாட்டில் மூழ்கி இருந்தால், மூன்று பேருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவேன் என்றும் சேதன் குமார் மிரட்டி இருக்கிறார். மேலும் பணப் பிரச்னையால்தான் மூன்று சகோதரிகளையும் பள்ளிக்கு அனுப்ப சேதன் குமார் ஆர்வம் காட்டவில்லை என்றும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மொபைல் போன்கள் தங்களிடமிருந்து பிடுங்கப்பட்டதால், மிகுந்த அதிருப்தியில் இருந்திருக்கின்றனர். `நாங்கள் இந்தியர்கள் கிடையாது. நாங்கள் கொரியாவைச் சேர்ந்தவர்கள்” எனக் கூறி வாதம் செய்திருக்கிறார்கள்.
அதோடு, “கொரிய நாடகங்களைப் பார்க்க முடியாமலும், கொரிய ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடியாமலும் மூன்று பேரும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விபரீத முடிவை எடுத்துள்ளனர்” என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சேர்ந்து செல்ஃபி எடுத்து, அதனை மொபைல் போனில் ஸ்கிரீனில் வைத்து இருந்தனர்.