மோடி படத்துடன் நாட்டின் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணங்களுடன் – ஹேப்பி பர்த் டே, Service is the Resolve – சேவையே இலக்கு, India first the inspiration – இந்தியா முதலில் (என்ற) உத்வேகம், 75 ஆண்டுகள், ஹேப்பி பர்த் டே என்ற வரிகள் ஒளிர்ந்தன.
இதுபற்றிய செய்தியை வெளியிட்ட ஏஎன்ஐ செய்தி நிறுவனம், இந்தக் கொண்டாட்டம், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலான உறவுகள் வளர்ந்துவருவதைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, காலையில் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய அரபு நாடுகளின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான், எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்த பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியையும் குறிப்பிட்டிருந்தது.
இதனால், ஒருவேளை ஐக்கிய அரபு நாடுகளின் அரசு ஏற்பாட்டில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக புர்ஜ் கலீஃபாவில் வாழ்த்துச் செய்தி ஒளிரச் செய்திருக்கலாமோ என்று தோன்றியது.
ஆனால், புர்ஜ் கலீஃபாவில் எத்தகைய செய்தியை, யார் ஒளிரச் செய்ய வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறப்படுகிறது. எனவே, கட்டணமின்றி ஒளிபரப்பியிருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு.
என்றால், எவ்வளவு கட்டணம்?
புர்ஜ் கலீபாவில் வார நாள்களில் மாலை வேளையில் (இரவு 8 முதல் 10 மணி) 3 நிமிடங்களுக்கு இந்த லேசர் விளம்பரத்தை ஒளிபரப்புவதற்குக் கட்டணம் 2.50 லட்சம் அரபு எமிரேட் திர்ஹாம்கள்! இன்றைய இந்திய மதிப்பில் ரூபாய் 59.84 லட்சம்!