நம்மில் பலருக்கும் நமது குழந்தை பருவகாலங்கள் எப்படி இருந்தன என்பது துளியும் நினைவில் இருப்பதில்லை. சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கும் அல்லவா? இதன் உலகம் என்று பல விஷயங்களை அவ்வபோதுதான் பார்த்திருப்போம், கற்றுக்கொண்டிருப்போம்..
ஆனால் ஏன் அந்த காலக்கட்ட நினைவுகள் மட்டும் முற்றிலும் நம் மனதிலிருந்து அழிந்துவிடுகின்றன? இந்தக் கேள்விக்கான விடையை ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
ஆயுட்கால உளவியல் துறையின் ஆராய்ச்சியாளரான சாரா பவர் கூற்றுப்படி, பொதுவாக நாம் மறந்துபோகும் இந்த விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கட்டங்களாகப் பார்க்கின்றனர்.
மூன்று வயதுக்குட்பட்ட பருவத்தில் நடக்கும் சம்பவங்கள் முழுமையாக நினைவில் இருந்து நீங்குவதை “இன்ஃபான்டைல் அம்னீஷியா’ என்றும், மூன்று முதல் ஆறு வயது வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை ‘சைல்ட்ஹுட் அம்னீஷியா’ என்றும் அழைக்கின்றனர்.
இந்தக் காலகட்டத்தில் நமது மூளை தகவல்களைப் பதிவு செய்தாலும், வளர்ந்த பிறகு அவற்றை மீண்டும் மீட்டெடுக்கும் திறனை இழந்துவிடுகிறது என்று கூறுகின்றனர்.
பலர் தங்களுக்கு இரண்டு வயதில் நடந்த பிறந்தநாள் விழா அல்லது சுற்றுலா சென்றது நினைவிருப்பதாகக் கூறுவார்கள்.
ஆனால் ஆய்வாளர் சாரா பவர் என்ன கூறுகிறார் என்றால், “இது பெரும்பாலும் உண்மையான நினைவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிறுவயது புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதாலோ அல்லது பெற்றோர்கள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்பதாலோ நமது மூளை தானாகவே ஒரு போலியான காட்சியை உருவாக்கிக்கொள்வதாகக் கூறுகிறார்.