“4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார்; வாய்ப்பில்லை” – ஓபிஎஸ்-க்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!

Spread the love

தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகம். அதற்காகவே சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்றோ எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை.

நாங்கள் ஏற்கெனவே கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி… டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா எனக் கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து அ.தி.மு.க-வில் இணையும் தொண்டர்கள் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதைத் தொடர்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், ஓ.பன்னீர் செல்வம் பேட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர் 4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார். பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஓ.பன்னீர் செல்வம் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *