கைவினை கலைக்கு பேர்போன மதுரையில், பெரியார் பேருந்து நிலையம் அருகில் திருப்பரங்குன்றம் சாலையோரத்தில் கட்டையை ஊன்றி அழகாக பூவைத் தொடுப்பதுபோல மூங்கிலில் வேலை செய்துகொண்டிருந்த சுவாரஸ்யமான ஒருவர் தென்பட்டார். அவரிடம் உடனே பேசினோம், அவர் “மூங்கிலில் திரை’ செய்து வாழ்க்கை நடத்தும் மதுரை வீரன்.
அதனை அவர் பின்னிக்கொண்டே எங்களிடம் பேச தொடங்கினார்,
“என் பெயர் மதுரை வீரன். 40 வருடங்களாக இதை செய்கிறேன்.
இந்த தொழிலை தலைமுறை தலைமுறையாக பார்த்து வருகிறோம். நான் மூன்றாவது தலைமுறை, இது அழிந்து வரும் கைவினை தொழில் தான். எங்க குடும்பத்திற்கு பல வருடங்களாக சோறு போட்டது இந்த தொழில்தான். சிறுவயதில் இருந்து அம்மா அப்பாகூட இருந்து இதை பழகிக் கொண்டு இப்போ நானும் செய்து வருகிறேன். இப்போ எனக்கு சோறு போடுது.
காலை எழுந்தவுடன் மூங்கிலை கோரிப்பாளையத்தில் இருந்து வாங்கிட்டு வந்துருவேன், வேலைக்கு தகுந்தாற் போல வாங்குவேன். மொத்தமாக எடுத்தால் மூங்கில் காய்ந்து விடும், காய்ந்தால் கிழிக்க வராது. பச்சை மூங்கில்தான் கிழிக்க வரும். மூங்கில் கிழிப்பதற்கு ஒருவர் வருவாரு… கிழித்து நீளமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுப்பாரு, நான் பின்னுவேன். இந்த கட்டையில் வைத்து நூலை கல்லில் கட்டி பின்னுவோம். வேலையை பொறுத்து நேரம் எடுக்கும்.