நெல்லை மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மன்னர் காலத்து பல்வேறு கல்வெட்டுகள், ஆய்வில் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர் பிரித்திவிராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின்போது ஊராட்சி ஒன்றியத்தின் கல்வெட்டுக்கு அருகே கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தார். இதனையடுத்து பல்கலைத் தொல்லியல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கல்வெட்டு உள்ள ஒரு தூணின் ஒரு புறத்தில் சங்கு, சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதன் கீழ்புறம் தற்கால தமிழ் வாசகங்கள் தொடங்குகின்றன. இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 748, தை மாதம் 28-ம் நாள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இக்கல்வெட்டு 453 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தொல்லியல்துறையின் உதவிப்பேராசிரியர் மதிவாணன், முருகன் மற்றும் தொல்லியலாளர் மீனா ஆகியோர் ஆய்வு செய்து கூறினர். அக்காலத்தில் மன்னர்களோ அல்லது செல்வந்தர்களோ கோயிலின் நித்திய பூசைகளுக்காக நிலங்களை வழங்கியதை இக்கல்வெட்டு கூறுகிறது.