அதன் பிறகு விதைகளை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக விவசாய மையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். எளிய முறையில் சாதாரண உபகரணங்களைக் கொண்டு காளானுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன்.
இதற்கு வேளாண் விஞ்ஞானிகள் எனக்கு உதவி செய்தார்கள். தரமான விதைகளை தயாரித்ததால் ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் கிடைக்கும் காளான் அளவு 700 கிராமில் இருந்து ஒரு கிலோவாக அதிகரித்தது. இது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. 2014ம் ஆண்டு தினமும் 20 கிலோ காளான் உற்பத்தி செய்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தேன். இதனால் எனக்கு உள்ளூரில் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். நேரடியாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களுக்கும் என்னால் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது.
படிப்படியாக காளான் உற்பத்தியை அக்டோபர் வரை நீட்டித்தேன். இதற்கு தேவையான சீதோஷண நிலையை உருவாக்கினேன். 70 சதவிகிதம் ஈரப்பதம் இருக்கும் வகையில் காளான் படுக்கையை டிசைன் செய்தேன். காளான் படுக்கைக்குத் தேவையான வைக்கோலை தண்ணீரில் சுண்ணாம்பு கலந்து 15 மணி நேரம் வைக்கிறோம். இதன் மூலம் அதில் உள்ள நுண்ணுயிர்கள் உட்பட அனைத்தும் அகற்றப்படுகிறது.
எங்களது தோட்டத்தில் இருக்கும் மாமரத்தின் நிழலில் இந்தப் படுக்கையை உருவாக்கினேன். கோடைக்காலமான மே மற்றும் ஜூன் மாதங்களில்கூட மரத்திற்குக் கீழே 10 டிகிரி வெப்பம் குறைவாகத்தான் இருக்கும். அது காளான் வளர்க்க மிகவும் உகந்ததாக இருந்தது. மரத்து நிழலில் அதிக அளவில் ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதமும் இருந்தது. இதன் மூலம் தரமான காளான்கள் கிடைத்தது. இப்போது 2,000 காளான் படுக்கைகள் உருவாக்கி இருக்கிறேன். இதற்குத் தேவையான வைக்கோலை 150 ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்து சேகரித்து அதனை சேமித்து வைத்துக்கொள்கிறேன்.
காளான் வளர 15 நாள்கள் பிடிக்கும். 12 முதல் 16 நாள்களில் அறுவடை செய்ய முடியும். காளான் அறுவடைக்குப் பிறகு வைக்கோல் உரமாக மாற்றப்பட்டு விடுகிறது. அதனை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கிறேன். 4 முதல் 5 டன் காளான் விதை உற்பத்தி செய்து அதனை கிலோ ரூ.120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். ஆயிரக்கணக்கானோர் என்னிடம் பயிற்சி எடுத்துள்ளனர். தினமும் 50 கிலோ காளான் மூலம் தினமும் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார். காளான் வளர்ப்புக்காக ராஜேந்திரகுமாருக்கு தேசிய விருதும் கிடைத்து இருக்கிறது.