2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அக்.26-ம் தேதி சென்னை பெரியார் திடலில் மறைந்த தலைவர் அப்துல்சமது நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 8,000 மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் மாநாடு டிச.28-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெறம். கேரளா (கேஎம்சிசி) இஸ்லாமிய கலாச்சார அமைப்பு சார்பில், மும்மத திருமணம் 2026-ம் ஆண்டு ஜன.8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2026-ம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் யூகங்கள், கருத்துகளை எதிர்க்கட்சியும், புதிய கட்சியும் உருவாக்கி வருகின்றன. தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு இதுவரை செய்த பல நல்ல காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. வரும் தேர்தலில் மதச்சார் பற்றக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.
அண்மையில் இலங்கை சென்று பிரதமர் ஹரினியை சந்தித்து, ‘தமிழக மீனவர்களை காக்கும் வகையில் இந்தோ- ஸ்ரீலங்கா பிஷ்ரீஸ் கார்ப் பரேஷன் அமைப்பை இரு நாடுகளும் சேர்ந்து உருவாக்கி, இரு நாட்டு மீனவர்களையும் உறுப்பினர்களாக்கி கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையை வழங்கினால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்’ என தெரிவித்தேன்.
இதையடுத்து அவர், டெல்லியில் இந்திய அதிகாரிகளிடம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். திமுகவுடனான கூட்டணி என்பது தேர்தலுக்கானது கிடையாது. கொள்கை ரீதியானது. என்றும் திமுகவுடன் தான் கூட்டணி. வேறு கூட்டணி பற்றி சிந்தித்ததோ, கனவுகூட கண்டதோ கிடையாது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கு 5 தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அதன்படி திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணையும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இவை ஒன்றிணைந்தால் திமுகவுக்கு சவாலாக இருக்குமா என்று கேட்டால், தேர்தலே சவாலாக தான் இருக்கும். பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பது தான் கடந்த கால வரலாறு. இவ்வாறு அவர் கூறினார்.