ஈரானிய வான்வெளி பாதுகாப்பை அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறிக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து ஈரான் தனது வான்வெளி பாதுகாப்பை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே இது போன்ற வான்வெளிப்பாதுகாப்பில் சிக்காமல் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய “JASSM-ER’ எனப்படும் ஏவுகணைகளை தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறது. இது 600 மைல்களுக்கும் அதிகமான தூரம் பறந்து எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து தப்பித்து பாதுகாப்பான தொலைவிலிருந்தே இலக்குகளைத் தாக்கி அழிக்கும் தன்மையுடையது.
ஏவுகணைக்கு தட்டுப்பாடு
அமெரிக்கா இது வரை ஈரான் போரில் 250 மைல் தூரம் சென்று தாக்கக்கூடிய JASSM ரக ஏவுகணைகளை மட்டும் பயன்படுத்தி வந்தது. இதில் கையிருப்பில் இருந்த 3ல் இரண்டு பங்கு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுவிட்டது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து, ஏவுகணை இடைமறிப்பான்கள் மற்றும் நீண்ட தூரத் தாக்குதல் ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்குப் பதிலாகப் புதியவற்றைத் தயாரித்து ஈடுசெய்யப் பல ஆண்டுகள் பிடிக்கும். ஏற்கனவே ஜோர்டானில் உள்ள அமெரிக்க ஆதரவு விமானத் தளத்தில், 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள இடைமறிப்பு ஏவுகணை தளம் ஒன்றை ஈரான் அழித்து விட்டது. இதனால் தென் கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ‘THAAD’ ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா மாற்றி வருகிறது. எனவே வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரப்படுத்த இருக்கின்றன.