பாஜக-வில் ஓரம் கட்டப்பட்ட சாமிநாதன்
அவர் தலைவர் பதவிக்கு வந்ததும் முதலில் செய்தது முன்னாள் தலைவர் சாமிநாதனை டம்மியாக்கியதுதான். எட்டு ஆண்டுகள் சாமிநாதனால் பொறுப்புகள் பெறப்பட்டவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளைப் பறித்து ஓரம் கட்டினார் செல்வகணபதி.
அதேபோல கட்சி தொடர்பான எந்தக் கூட்டங்களுக்கும் சாமிநாதனுக்கு தகவலாகக் கூட சொல்லாமல், அவரை புறக்கணித்தார் செல்வகணபதி. கட்சியைப் பொறுத்தவரை `ஆக்டிவ்’ தலைவராக வலம் வந்த சாமிநாதன், தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டதால் வெறுத்துப் போனார்.
அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சன அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்ததால், சாமிநாதனை அமைதியாக இருக்கும்படி கட்டளையிட்டது பா.ஜ.க தலைமை.
அதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ என்ற பெயரில், அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து கட்சியில் இணைந்தார் சாமிநாதன்.
ஆனால் அது தொடர்பான புகைப்படங்களோ, அதிகாரப்பூர்வ அறிக்கையோ த.வெ.க-வில் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் இன்று பனையூரில் நடைபெற்ற விழாவில் விஜய் முன்பு கட்சியில் இணைந்திருக்கிறார். அவருடன் சென்ற மற்றொருவர் காரைக்கால் தெற்கு தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ அசனா.
கடந்த 2021 தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக, புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது அ.தி.மு.க. இனிமேலும் அந்தக் கட்சியில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த அசனா, த.வெ.க வண்டியில் ஏறிவிட்டார்.!