எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது மும்பை அருகில் உள்ள பீவாண்டியில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று பீவாண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து இன்று ராகுல் காந்தி மும்பை வந்தார். அவர் சாலை மார்க்கமாக விமான நிலையத்தில் இருந்து பீவாண்டி நோக்கி சென்றார். வழியில் பா.ஜ.கவினர் ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். முலுண்ட் டோல்கேட் அருகில் பா.ஜ.கவினர் கூடி இந்த கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் லஷ்கர்-இ-ராகுல் காந்தி என்று கூறி கோஷமிட்டனர். போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி ராகுல் காந்தியின் கார் எந்த பிரச்னையும் இன்றி செல்ல வழி செய்து கொடுத்தனர். ராகுல் காந்தி பீவாண்டி கோர்ட்டில் ஆஜரானார். ராகுல் காந்திக்கு கோர்ட் ஜாமீன் கொடுத்திருந்தபோது அவருக்கு உத்தரவாதம் கொடுத்திருந்த நபர் இப்போது இறந்து போனார். எனவே புதிதாக ஒருவரின் உத்தரவாதம் கொடுப்பதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார்.

ராகுல் காந்திக்காக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் புதிய உத்தரவாதம் கொடுத்தார். ராகுல் காந்திக்கு எதிராக 2014-ம் ஆண்டு இவ்வழக்கு தொடரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.குறித்து தெரிவித்த கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்து இருந்தார்.
முன்னதாக காங்கிரஸ் இளைஞர் அணியினர் டெல்லியில் நடந்த சர்வதேச ஏ.ஐ. மாநாட்டில் சட்டை இல்லாமல் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து உள்ளே நுழைந்து தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு “பிரதமர் சமரசம் செய்து கொண்டார்” போன்ற வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அசைத்து முழக்கமிட்டனர். இந்த டி-சர்ட்டுகளில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் படங்கள் இருந்தன.
இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் அனுப்ப போலீஸார் கேட்டுக்கொண்டனர். போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இது போன்று சதி செய்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேபாளத்தில் ஆட்சியை கவிழ்க்க வன்முறை கலந்த Gen Z போராட்டம் நடந்தது போன்று, இந்தியாவிலும் அதே போன்ற ஒரு சதியை அரங்கேற்ற இவர்கள் முயன்றதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லி, சூரத், மும்பை, ஐதராபாத் போன்ற பகுதியில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர்.