அ.இ.அ.தி.மு.க-வை தொடங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் தொடர்ந்து வழி நடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பதவியில் கொஞ்சம் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.
ஜெயலலிதா மறைந்த போது முதலமைச்சர் நாற்காலியிலிருந்த ஒ.பன்னீர்செல்வம், திமுக உறுப்பினராகி விட்டார்.
ஜெ.க்குப் பிறகு கட்சியைக் கைப்பற்றி விடுவாரோ என பலரும் நினைத்த வி.கே. சசிகலா தனிக்கட்சி தொடங்கி விட்டார். டி.டி.வி தினகரனை பன்னீர்செல்வம், சசிகலா போல் போட்டியாகக் கருதவில்லை பழனிசாமி. இருந்தாலும் அவருமே பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு விட்டார்.
பிறகென்ன, கட்சித் தலைமைப் பொறுப்புக்கு ரூட் க்ளியர் ஆகி விட்டது. ஆனால் ஆட்சிக்கு?
ஜெ.மறைந்த போது கட்சி ஆட்சி பீடத்தில் இருந்தது. 2016 தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே அவர் இறந்து விட, அடுத்த ஐந்தாண்டுகள் பழனிசாமி முதல்வராக இருந்தார். ஐந்தாண்டுகள் முடிய 2021 தேர்தலில் 60க்கும் அதிகமான இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் சென்றது கட்சி.

பன்னீர் அண்ட் கோ
இந்த இடத்தில் “ஜெ இல்லாத போதே இவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் என்றால், ஜெ இருந்திருந்தால் நிச்சயம் மூன்றாவது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருப்பார்’ என்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனாலும் பழனிசாமி தன்னை முதல்வராக முன் நிறுத்திய முதல் தேர்தலில் தோல்விதான் கிடைத்தது.
இந்த தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு சசிகலா வெளியேற்றப் பட்டது, தினகரன் எம்.எல்.ஏக்களை இழுத்தது என அதிமுகவில் அரங்கேறிய பல சம்பவங்களுக்கு இந்த தோல்வியில் பங்குண்டு என்கிறார்கள் இ.பி.எஸ்.சின் ஆதரவாளர்கள்.
பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சி அமைய, ‘அவ்வளவுதான், இனி அதிமுக சிதறி விடுமென எதிர்க்கட்சிகளும் அதிமுகவில் பழனிசாமி தலைமைக்குச் சிக்கல் வருமென உள்கட்சியில் சிலரும் உள்ளூர மகிழ்ந்தனர்.
ஆனால் ‘கூடவே இருக்கும் பன்னீர்செல்வம் பின்னால் இருக்கும் மூன்று பேரைத் தவிர வேறு எவரும் எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டார்கள்’ என மிகச் சரியாக கணித்தார் பழனிசாமி.
அவர் நினைத்தது போலவே நடந்து பன்னீருடன் அவர் அணியிலிருந்த ஐயப்பன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூன்று பேர் திமுக பக்கம் போயிருக்கின்றனர்.