சக நடிகைகளும் இதேபோன்ற பாதிப்புக்கு உள்ளாவதால், அவர்களின் சார்பாகவும் இந்தப் பதிவை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலீலாவின் ஆதங்கமும் தொழில்நுட்பம் குறித்த கருத்தும்
தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள ஸ்ரீலீலா, தமிழில் ‘பராசக்தி’ படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஜனவரி பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவரது ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியதைத் தொடர்ந்து, இது குறித்து ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாகப் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் அனைவரிடமும் ஏஐ (AI) மூலமாக உருவாக்கப்படும் கண்றாவிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள் எனக் கைகூப்பி கேட்டுக்கொண்ட அவர், “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பதற்கும் சீரழிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதே வாழ்க்கையை எளிமையாக்கவே, கடினமாக்க அல்ல என்பதே எனது கருத்து” என்று வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பான சூழலுக்கான குரல் மற்றும் வேண்டுகோள்
அனைத்து பெண்களுக்குமே பாதுகாப்பான சூழ்நிலை வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்ரீலீலா, அனைத்துப் பெண்களுமே ஒருவருக்கு மகளாகவோ, சகோதரியாகவோ, உடன் வேலை செய்பவர்களாகவோ இருக்கிறார்கள் என்றும், கலைத்துறையில் இருந்தாலுமே அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பான சூழலைத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது பிஸியான வேலை நெருக்கடியினால் சமூக வலைதளங்களில் நடைபெறுவதைக் கவனிக்க முடியவில்லை என்றும், தனது நலம்விரும்பிகள் இதைக் கவனத்தில் கொண்டுவந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இது மிகவும் வருத்தமளிக்கிறது, தொந்தரவு தருகிறது. என்னைப் போலவே எனது சக நடிகைகளும் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தனது ரசிகர்கள் மீதான அன்பினால் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் எனக் கேட்டுக்கொண்ட ஸ்ரீலீலா, இனிமேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.
