தமிழகத்தில் 21 வகையான பி.காம் படிப்புகள் இருக்கின்றன. பேங்கிங், அட்வர்டைசிங், மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ் என பொதுவான பி.காம் படிப்பில் இருந்த பிரிவுகளை மட்டுமே எடுத்து தனிதனிப் படிப்பாக மாற்றினார்கள். பிரிவுகள் வாரியாக திறன்படைத்தவர்களை உருவாக்குகிறோம் என்று சொல்லித்தான் இந்தப் படிப்புகளை உருவாக்கினார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல, பிகாம் படிப்பு மீது மக்களுக்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. ஒரு கல்லூரியில் அந்தப் படிப்பில் 60 மாணவர்களைத் தான் சேர்க்க முடியும். இப்படித் தனித்தனி பிரிவுகளை உருவாக்கினால் ஒவ்வொரு பிரிவிலும் 60 மாணவர்களைச் சேர்த்து காசு பார்க்கலாம். அதுதான் இப்படி தனித்தனி பிரிவுகள் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம்.
இப்படி தனித்தனிப் பிரிவுகளைப் படிக்கும்போது மாணவர்கள் தங்கள் வேலை வாய்ப்பை சுருக்கிக்கொள்கிறார்கள். பிகாம் அட்வர்டைசிங் என்றால் அட்வர்டைசிங் துறையைத் தாண்டி வேறெதிலும் அதைவைத்து வேலை வாய்ப்பைப் பெறமுடியாது. பொதுவாக இளநிலையில் ஜென்ரல் பி.காம் படித்து, முதுநிலையிலோ, டிப்ளமோவிலோ இதுமாதிரி சிறப்புப் பிரிவுகளை எடுத்துப் படிப்பதுதான் பாதுகாப்பானது. ஆனால் கல்வி நிறுவனங்கள், புதிது புதிதாக செய்திகளைக் கட்டமைத்து, அதற்கான பாதையை அடைத்துவிடுகின்றன. இதுதான் AI படிப்பிலும் நடந்திருக்கிறது.
“AI என்பது சாட்ஜிபிடி, ஜெமினி, க்ராக் மட்டுமல்ல. அது தனித்து இயங்கும் துறையல்ல. அது கம்ப்யூட்டர் சயின்ஸின் ஒரு கூறு. AI-ஐ மட்டுமே சிறப்பு நிலையில் எடுத்துப் படித்தவர்களுக்கான என்ட்ரி லெவல் வேலைகள் இன்னும் இந்தியாவில் அதிகரிக்கவில்லை. அதனால் இது கொஞ்சம் கஷ்டகாலம் தான். ஏ.ஐ முடித்து கடந்தாண்டு அப்பாய்ண்மெண்ட் வாங்கியவர்களைக்கூட இன்னும் நிறுவனங்கள் அழைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்…” என்கிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா.
“இளநிலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு AI, Data Science-ல் முதுநிலையோ டிப்ளமோவோ படிக்கலாம். அதுதான் சரியான வழி. ஆனால் பொறியியல் கல்லூரிகள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக மக்களை தவறான பாதைக்குத் திசைதிருப்புகின்றன. அதற்கு ஏஐசிடிஇ போன்ற அமைப்புகளும் துணைபோகின்றன.