ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாடுகளாக பஹ்ரைன், கத்தார், துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் லெஸ்லி ஜே. மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே மர்ம ட்ரோன்கள் தொடர்ந்து பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில் அமெரிக்க ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் அச்சுறுத்தல்களைத் தீவிரமாகவும் கண்காணித்து வருகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரே இரவில் ஃபோர்ட் லெஸ்லி ஜெ.மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே பல ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்பது குறித்து வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ராணுவ தளத்தில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச்செயலாளர் பீட் ஹெக்சேத் ஆகியோர் வசிக்கின்றனர்.
ட்ரோன் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த இரண்டு பேரையும் வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்தும் வெள்ளை மாளிகையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் மெக்நாயர் தளம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (National Defense University) மற்றும் பென்டகனின் மிக உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தங்கும் இடமாகும்.