விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், மனைவி அம்பிகா (வயது 62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி, காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றவரை அன்று மதியம் முதல் காணவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் அம்பிகாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், திருச்சுழியில் இருந்து காரியாபட்டி செல்லும் சாலையில் புலிக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவல் அறிந்த திருச்சுழி போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது சடலமாக கிடந்தது மூதாட்டியான அம்பிகாதான் எனத் தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுக்காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது கொலை செய்யப்பட்ட மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் நடுவில் அமர வைத்து இரண்டு பெண்கள் டூவீலரில் ஏற்றி சென்றது பதிவாகி இருந்தது.