Last Updated:
விலங்குகள் நமக்கு சமநிலையை கற்பிக்கின்றன. அவற்றிலிருந்து பணிவையும் நம்பிக்கையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும்.
மனிதாபிமான பணிகளுக்கான சர்வதேச விருதினை வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் ஆனந்த் அம்பானி பெற்றுள்ளார். இந்த விருது குளோபல் ஹியூமன் சொசைட்டியால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விருதினைப் பெறக்கூடிய முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் ஆனந்த் அம்பானி. குஜராத்தில் வன விலங்குகளுக்கான மறு வாழ்வு மையத்தை வந்தாரா என்ற பெயரில் ஏற்படுத்தி ஆனந்த் அம்பானி ஏராளமான சேவைகளை செய்து வருகிறார்.
இந்த வன விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் கைவிடப்பட்ட யானைகள், சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய வன விலங்குகள் மறு வாழ்வு மையமாக சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
வனவிலங்குகள் மீது ஆனந்த் அம்பானி செலுத்தி வரும் அக்கறை காரணமாக அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தனர். அவரது திருமணத்தை முன்னிட்டு சர்வதேச அளவிலான பல்வேறு பிரபலங்கள் இந்த வந்தாரா மையத்தை பார்வையிட்டு பிரமித்து போனார்கள்.
அத்துடன் பிரதமர் மோடியும் வந்தாரா மையத்தை பார்வையிட்டு ஆனந்த் அம்பானியை பாராட்டி பேசி இருந்தார். இந்த சூழலில் ஆனந்த் அம்பானிக்கு குளோபல் ஹியூமன் சொசைட்டி என்ற அமெரிக்க சர்வதேச நிறுவனத்தால் மனிதாபிமான பணிகளுக்கான விருது ஆனந்த் அம்பானிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினைப் பெறும் முதல் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் ஆனந்த் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக குளோபல் ஹியூமன் சொசைட்டி அமைப்புடைய தலைமை நிர்வாக அதிகாரி ராபின் கான்செர்ட் கூறியதாவது:
வந்தாரா என்ற வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு விலங்குகளுக்கும் கண்ணியத்தையும் நம்பிக்கையையும் ஆனந்த் அம்பானி அளித்து வருகிறார். அவரது தொலைநோக்குப் பார்வை பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
உலகளாவிய தரத்தை ஆனந்த் அம்பானி வந்தாராவில் வழங்குகிறார். உலகில் விலங்குகள் நலனுக்கான அசாதாரண மையமாக இந்த வந்தாரா செயல்படுகிறது. ஒரு நவீன விலங்கு நல மையம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வந்தாரா தான் முன்மாதிரியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
விருது பெற்றுக் கொண்ட ஆனந்த் அம்பானி கூறுகையில், எனக்கு அளித்த கௌரவத்திற்காக குளோபல் ஹியூமன் சொசைட்டிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விலங்குகள் நமக்கு சமநிலையை கற்பிக்கின்றன. அவற்றிலிருந்து பணிவையும் நம்பிக்கையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். வந்தாரா மூலமாக ஒவ்வொரு உயிருக்கும் கண்ணியத்தையும், பராமரிப்பையும், நம்பிக்கையையும் வழங்குவது தான் எங்களுடைய நோக்கம் என்று தெரிவித்தார்.
December 08, 2025 9:28 PM IST
