இதில் இன்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகிய இரண்டு பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. டெல்லி நீதிமன்றம் தனது உத்தரவில் சிபிஐக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. `அரசு தரப்பு தனது குற்றச்சாட்டுகளை நம்பகமான ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது” என்று கோர்ட் தீர்ப்பளித்தது. பெரிய சதி மற்றும் குற்றவியல் நோக்கம் பற்றிய கூற்றுக்கள் நீதித்துறை ஆய்வுக்கு நிற்காது என்று நீதிமன்றம் கூறியது.
“கெஜ்ரிவாலுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் வேண்டும்” என்று கூறிய டெல்லி நீதிமன்றம், “மத்திய சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்கான காரணத்தை ஆதாரங்கள் இல்லாமல் உறுதி செய்ய முடியாது” என்றும் கூறியது. “அரசுத் தரப்பு கூற்றுகள் ஆதாரங்களுடன் வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டால், சி.பி.ஐ மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை குறித்து டெல்லி நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும், கலால் கொள்கையை உருவாக்கும்போது பல நிலைகளில் ஆலோசனை நடத்தப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனந்த கண்ணீர் விட்ட கெஜ்ரிவால்!
கோர்ட் தீர்ப்பை கேட்டதும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆனந்த கண்ணீர் விட்டார். இது குறித்து அவர் உணர்ச்சி பெருக்குடன் கூறுகையில்,”இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது. அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். எங்களுக்கு நீதி வழங்கிய நீதிபதிக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். உண்மை வென்றது” என்று கெஜ்ரிவால் கூறினார்.