அப்படித்தான் ஏ.வி.எம். தயாரிப்பில் ‘முரட்டுக் காளை’ திரைப்படம் நிகழ்ந்தது. ஏ.வி.எம். – ரஜினி ஹிட் வரிசைக்குத் தொடக்கமிட்டதும் இத்திரைப்படம்தான்.
பஞ்சு அருணாச்சலத்திடம் சரவணன் ரஜினியின் கால்ஷீட் கேட்டதற்குப் பின்னால் பெரிய கதை இருக்கிறது. சரவணன், ஏ.வி.எம். நிறுவனத்தின் புகழை உயரப் பறக்க வைக்கவேண்டும் என விரும்பினார்.
மீண்டும் தயாரிப்புப் பக்கம் உறுதிப்பாட்டுடன் அடுத்தடுத்துத் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த ஆசைகள் தாமதமாகிக்கொண்டே போனது. அப்படியான வேளையில் சரவணனுக்குள் ஒரு பயமும் எழுந்தது.
அந்தச் சூழலை ஒருமுறை விளக்கியவர், “ரொம்ப நாளைக்குப் பிறகு இண்டஸ்ட்ரி நல்லா இருக்கு. நாம திரும்பவும் படம் எடுக்கலாம்’ங்கிற எண்ணத்துக்கு அப்புச்சி வந்தாங்க.
ஆனா, கமிட் பண்ணின அந்த இரண்டு படங்களும் தள்ளிப்போகுது. இப்ப ரஜினியும் ‘அடுத்த வருஷம் கால்ஷீட் தர்றேன்’னு சொன்ன விஷயத்தை அப்புச்சிகிட்ட சொன்னா, அவர் மூட் அவுட் ஆகி, ‘நமக்கும் படம் எடுக்கிறதுக்கும் ராசி இல்லைபோல. நல்லா வசதியா இருக்கோம்.
போதும், நீங்க பேசாம ஸ்டுடியோவை மட்டும் கவனிச்சுக்கங்க’னு சொல்லிட்டார்னா எந்தக் காலத்துலயும் இனி நாங்க படம் எடுக்க முடியாது. ஏன்னா, அப்புச்சி பேச்சை நாங்க தட்ட மாட்டோம்னு உங்களுக்கே தெரியும்!” எனச் சொல்லியிருக்கிறார்.
தந்தை முடிவை மாற்றவிடக்கூடாது என்ற யோசனையில்தான் பஞ்சு அருணாச்சலத்திடம் வெளிப்படையாகவே ரஜினி கால்ஷீட்டை விட்டுத் தரக் கேட்டிருக்கிறார்.