அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும் அஜித் பவார் கட்சி தனித்து போட்டியிட்டது. இதே போன்று சரத் பவார் கட்சியும் தனித்து போட்டியிட்டது. இரண்டு பேருமே படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதே போன்று ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு சொர்ப்ப இடங்களை கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பா.ஜ.க போட்டியிட்டது. அதுவும் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு இடங்களை பா.ஜ.க ஒதுக்கியது. இதனால் சிவசேனா அனுதாபிகள் எது உண்மையான சிவசேனா என்ற குழப்பத்திற்கு வந்தனர்.
கடந்த 50 ஆண்டுகளாக தாக்கரே பிராண்ட் மராத்தியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தது. இதே போன்று சரத் பவார் மாநிலம் முழுவதும் குறிப்பாக மேற்கு மகாராஷ்டிராவில் சிறந்து விளங்கும் கூட்டுறவு துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் பிளவுபடுவதற்கு முன்பே, மேற்கு மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக விளங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வங்கிகள் மற்றும் பால் சங்கங்களில் பா.ஜ.க ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பவாரின் பல விசுவாசிகளும், கூட்டுறவுத் துறையின் மீது ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் தலைவர்களும் கூட பா.ஜ.க.வுக்கு மாறினர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது.
இப்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு ஒன்றாக சேர வேண்டிய நிலைக்கு தள்ளி இருக்கிறது. அஜித் பவாரும், சரத் பவாரும் புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
பா.ஜ.க நினைத்தால் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் என்பதை அஜித் பவார் புரிந்து கொள்ள தொடங்கி இருப்பதாகவும், எனவேதான் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது கட்சியோடு இணைக்க அஜித்பவார் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் பவாரால் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியை பிடித்துள்ளது.