ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டு நாள் மாநாடு மும்பையில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டதன் 100வது ஆண்டை குறிக்கும் வகையில் நடந்த இம்மாநாடு ஆர்.எஸ்.எஸ்.மாநாடு போன்று அல்லாமல் சினிமா மாநாடு போன்று இருந்தது. இம்மாநாட்டில் முதல் நாளில் நடிகர் சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருடன், திரைப்பட இயக்குநர்களான மோஹித் சூரி, சுபாஷ் காய், நிதேஷ் திவாரி, மகாவீர் ஜெயின், ஓம் ராவத், விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரண்டாம் நாளில், அக்ஷய் குமார், விக்கி கௌஷல், திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் நடிகை அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இது தவிர ரவீனா தண்டன், ஷில்பா ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப், ரூபாலி கங்குலி மற்றும் வினீத் குமார் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். திரைப்பட இயக்குநர்களான மதுர் பண்டார்கர், மகேஷ் மஞ்ச்ரேகர், ஆனந்த் எல். ராய், அமர் கௌஷிக், அமித் சர்மா, ரமேஷ் தௌரானி மற்றும் ஆனந்த் பண்டிட் ஆகியோரும் வந்திருந்தனர்.

பாலிவுட் பிரபலங்கள் கூட்டத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. இஸ்லாமிய நடிகர்கள் ஆர்.எஸ்.எஸ்.மாநாட்டில் பங்கேற்றது குறித்து சிவசேனா(உத்தவ்) கேள்வி எழுப்பி இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பால்தான் பா.ஜ.க நன்றாக இருக்கிறது
இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில், “‘பாஜகவின் ‘நல்ல நாட்கள்’ ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் வந்தன. மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நல்ல நாட்கள் பாஜகவால் வரவில்லை. ராமஜென்மபூமி இயக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ் உறுதுணையாக இருந்தது, அதற்கு ஆதரவளித்தவர்கள் பயனடைந்தனர். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ‘நல்ல நாட்கள்’ அதன் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் கொள்கை மீதான அர்ப்பணிப்பின் மூலம் வந்தன.
யுன்ஃபார்ம் சிவில் சட்டம் (யுசிசி) நாட்டை ஒன்றிணைக்க உதவும். அது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையையும் பெற்ற பிறகு கொண்டு வரப்படவேண்டும். உத்தரகாண்ட் இது தொடர்பாக ஒரு வரைவு மசோதாவை வெளியிட்டது.