தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி வைத்தார். இப்போது ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது.
ஆனந்த் அம்பானிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் நேற்று இரவு மும்பை பாந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தில் ஆனந்த் அம்பானிக்கு பிறந்தநாள் தெரிவித்து அவரது புகைப்படத்துடன் கூடிய மின்விளக்கு ஜொலித்தது. இது பற்றிய வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் மும்பையை குஜராத் ஆள்கிறது என்றும், இதற்கு முன்பு சத்ரபதி சிவாஜியின் புகைப்படத்தை இது போன்று பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சிறப்பு விமானத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஜாம்நகர் சென்றனர். நடிகர் ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக், அவரது மனைவி ஜெனிலியா, போனி கபூர், அனன்யா பாண்டே உட்பட பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் வந்திருந்தனர்.
ஷாருக்கான் தனது மனைவி மற்றும் மகனுடன் தன் வளர்ப்பு நாயையும் அழைத்து வந்திருந்தார். சல்மான் கான் தனது மைத்துனர் ஆயுஷ் சர்மாவுடன் வந்திருந்தார். நேற்று இரவு முழுவதும் பிறந்தநாள் பார்ட்டி களைகட்டி இருந்தது. ஆடலும், பாடலுமாக இருந்தது. முன்னதாக ஆனந்த் அம்பானி தனது பெற்றோருடன் சென்று மும்பையில் உள்ள பிரபலமான சித்தி விநாயக் கோயிலில் தரிசனம் செய்தார். ஆனந்த் அம்பானியின் 31வது பிறந்தநாளையொட்டி ஷீரடி சாய்பாபா கோயில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.