மும்பையில் தினமும் ஏராளமான திருட்டு, செயின் பறிப்பு என பலதரப்பட்ட குற்றங்கள் நடக்கிறது. இதில் அதிகமான குற்றங்களில் துப்புத்துலங்காமலே போய்விடுகிறது. மும்பை சயான் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பைக்கில் வந்த நபர் செயினை பறித்து சென்றுவிட்டார். இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்ய விரும்பவில்லை. ஆனால் போலீஸார் அப்பெண்ணிடம் பேசியபோது திருடன் பறித்து சென்றது கவரிங் செயின் என்று தெரிய வந்தது. அப்படி இருந்தும் அப்பெண்ணிடம் சொல்லி புகாரை பதிவு செய்ய வைத்தனர். அப்புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் ஹெல்மெட் அணிந்து இருந்தார்.
அவர் எங்கேயாவது தலையில் இருந்து ஹெல்மெட்டை எடுக்கிறாரா என்பது குறித்து போலீஸார் 80க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் எங்கேயும் அவரது முகம் தெளிவாக தெரியவில்லை.
அதோடு வழிப்பறி செய்துவிட்டு சிறிது தூரம் சென்றவுடன் சட்டையையும் மாற்றிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவன் இது போன்று பல இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அதோடு ஒவ்வொரு முறையும் நவிமும்பை பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடி அதனை பயன்படுத்தி திருடிவிட்டு அந்த இரு சக்கர வாகனத்தை தானே பகுதியில் கொண்டு போய்விட்டுவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். போலீஸார் அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ததில் அத்திருடன் ஒவ்வொரு முறையும் சட்டையை மாற்றினாலும், காலில் அணியும் ஷூவை மட்டும் மாற்றாமல் தொடர்ந்து அதையே அணிந்து வந்தான்.
இதையடுத்து அவன் திருடிவிட்டு இரு சக்கர வாகனத்தை போடும் இடத்தில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். போலீஸார் எதிர்பார்த்ததுபோன்று அத்திருடன் திருட்டு வாகனத்தை எடுக்க வந்தான்.