டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் தங்கப்பதக்கம் வென்ற அங்குஷ் பரத்வாஜ் என்பவர் பயிற்சி கொடுத்து வருகிறார்.
அங்குஷ் சொந்தமாக பயிற்சி அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். 17 வயது வீராங்கனையிடம், `உனது திறமையை ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறி அவரை பரிதாபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அங்குஷ் அழைத்தார். போட்டி முடிந்த பிறகு வீராங்கனை அவர் அழைத்த ஹோட்டலுக்கு சென்றார்.
அங்கு திறமையை ஆய்வு செய்வது போல் வீராங்கனையிடம் மோசமாக நடந்து கொள்ள முயன்றார். ஆனால் அதற்கு வீராங்கனை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பையும் மீறி வீராங்கனையை அங்குஷ் பாலியல் வன்கொடுமை செய்த்விட்டார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் உனது விளையாட்டு எதிர்காலத்தை ஒரே அடியாக அழித்துவிடுவேன் என்று கூறி மிரட்டி அனுப்பி வைத்தார்.
பின்னர் பாதிக்கப்பட்ட வீராங்கனை இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் அங்குஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக பரிதாபாத் போலீஸ் செய்தித்தொடர்பாளர் யஷ்பால் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட துப்பாக்கிச் சுடும் வீராங்கனை போலீஸில் அளித்த புகாரில், தனது பெற்றோர் நொய்டாவில் வசிப்பதாகவும், தான் சண்டிகரில் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் 2017ம் ஆண்டு முதல் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், மேலும் கடந்த ஆண்டு தான் அங்குஷ் பரத்வாஜிடம் பயிற்சி பெறத் தொடங்கினார். துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்காகப் பல நகரங்களுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 16 அன்று, டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வீராங்கனை கலந்து கொண்டார்.