மகாராஷ்டிராவில் காலியாகும் 7 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 6 உறுப்பினர்களை ஆளும் பா.ஜ.க கூட்டணியால் தேர்வு செய்ய முடியும். ஒரு இடத்தை மட்டும் எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்ய முடியும். அந்த ஒரு இடத்திற்கு எதிர்க்கட்சி கூட்டணியில் கடும் போட்டி ஏற்பட்டது.
காங்கிரஸ் தங்களுக்கு அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. சரத்பவாருக்கு அந்த இடத்தை கொடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கோரிக்கை விடுத்திருந்தது. அதேசமயம் சிவசேனா(உத்தவ்)விற்கு அந்த இடம் கிடைக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கோரிக்கை விடுத்து வந்தார்.
ஆனால் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் சேர்ந்து சரத்பவாரை அந்த ஒரு இடத்திற்கு வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளன.
மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார், தேசியவாத காங்கிரஸ் எம்பியும், சரத்பவாரின் பவாரின் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் தெற்கு மும்பையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் இதனை மூன்று தலைவர்களும் முறைப்படி அறிவித்தனர். முன்னதாக உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி சஞ்சய் ராவுத் சரத்பவாரை சந்தித்து பேசினார். ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் சஞ்சய் ராவுத் பங்கேற்க வில்லை. இத்தேர்வு மூலம் சஞ்சய் ராவுத்திற்கும், ஆதித்ய தாக்கரேயிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே சரத்பவார்தான் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று சஞ்சய் ராவுத் கூறி வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களை உறுப்பினர் பதவி கிடைக்காமல் போனது குறித்து ஹர்ஷ்வர்தன் கூறுகையில். “ஆரம்பத்தில் நாங்கள் அந்த இடத்தைப் பெற வேண்டும் என்ற எங்கள் வலுவான கருத்தை வெளிப்படுத்தினோம், மேலும் ராகுல் காந்தி சமீபத்தில் மும்பைக்கு வந்தபோது அவருடன் இது குறித்து விவாதித்தோம். எங்கள் கட்சித் தலைவர் (மல்லிகார்ஜுன் கார்கே) சரத் பவாரை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். எனவே சரத்பவார் மாநிலங்களவைத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளராக இருப்பார்” என்று சப்கல் கூறினார். இன்று சரத் பவார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.