இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி M.S தோனியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
‘Sports Now’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி, ” தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (2011) வென்று கொடுத்தவர் தோனி.
டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக அவரது தலைமையிலான அணி வென்றிருக்கிறது.

அதனால் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் என சொல்வேன்.
ஜார்க்கண்ட் எனும் சிறிய மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வளர்ந்தவர் தோனி.
அவருக்கு முன்பு அந்த மாநிலத்தில் இருந்து வந்து இந்திய அணிக்காக விளையாடிவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை.
அந்த வகையில் அவர் பல இளம் வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.
எனக்கு இளம் வயது தோனிதான் அதிகம் பிடிக்கும். அவரை போல சர்வ சாதரணமாக சிக்ஸர் விளாசியவர்களை நான் பார்த்தது இல்லை.
நீளமான முடியுடன், அஞ்சாமல் விளையாடுவார். நான் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அதிகம் உருவெடுத்தது இல்லை.
அதனால்தான் தோனியை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்” என்று கங்குலி தோனியை புகழந்து பேசியிருக்கிறார்.