விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.
ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எம்.எஸ்.தோனி இதனை தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நானும் விராட் கோலியும் இணைந்து இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளோம். உலக கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், மிகச் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். அவருடன் இணைந்து மிடில் ஓவர்களில் அதிகம் பேட்டிங் செய்துள்ளேன்.
அவருடன் இணைந்து பேட்டிங் செய்து, இரண்டு மற்றும் மூன்று ரன்கள் ஓடுவது மிகுந்த உற்சாகமாக இருக்கும். நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்ள மாட்டோம். ஆனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறிது பேசிக்கொள்வோம். இதுவே எங்கள் இருவருக்கும் இடைப்பட்ட புரிதல் என்றார்.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி, தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடித்த 76 ரன்கள் அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
தனக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என எம்.எஸ்.தோனி அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.