பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள லியாரி பகுதியிலிருந்து பாகிஸ்தானின் மொத்த அதிகார மையத்தையும் ஆட்டிப்படைக்கும் கேங்ஸ்டர் கும்பலுக்குள் ஊடுருவி, அதில் ஒவ்வொரு படிநிலையாக உயரும் இந்திய உளவாளியின் கதையைச் சொன்னது “துரந்தர்’ முதல் பாகம்.
லியாரியின் சிம்மாசனம் கிடைத்த பிறகு, இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கும் அழிவுகளுக்கும் எப்படி அவர் பழிவாங்குகிறார் என்பதைச் சொல்கிறது அதன் அடுத்த பாகமான இந்த ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’.
முதல் பாகத்தை விட ரத்தம், வன்முறை, பிரசார நெடி என அனைத்துமே இப்போது இரட்டிப்பாகி உள்ளன. படத்தின் நீளமும் முந்தைய பாகத்தை விட 20 நிமிடங்கள் அதிகம்; கிட்டத்தட்ட 4 மணி நேரம். இந்த நான்கு மணிநேரமும் பார்வையாளனைக் கட்டிப்போடுகிறதா இந்த ஆக்க்ஷன் திரில்லர் சினிமா?
ஹம்சா அலி மசாரியாக லியாரியை ஊடுருவிய ஜஸ்கிரத் சிங் ஒரு தூக்குத் தண்டனை கைதி என்றும், தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய அரசு வகுத்திருக்கும் ரகசிய ‘துரந்தர்’ திட்டம் குறித்தும் கடந்த பாகத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருந்தது.
அவர் எப்படி தூக்குத் தண்டனைக்கு ஆளான கைதியானார், எப்படி இந்த மிஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற பின்கதையில் தொடங்குகிறது இந்தப் படம். சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அந்த அத்தியாயத்திற்குப் பிறகு மீண்டும் லியாரி உலகத்தில் கதை தொடர்கிறது.
பாகிஸ்தான் அரசியல், லியாரி கேங் மோதல், பலூசிஸ்தான் கிளர்ச்சி, தீவிரவாதிகளை வளர்த்தெடுக்கும் ISI அதிகாரி எனக் கடந்த பாகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட உலகில் இப்போது ஹம்சா அதிகார மையத்தை நெருங்கிவிட்டதால், முதல் பாகத்தில் இருந்த சவால்கள் அவருக்கு இல்லை.
அதனால் வேகமாக அடுத்தடுத்த நிகழ்வுகளாக படம் நகர்கிறது. எதிர்பாராத அந்த இன்டர்வல் ட்விஸ்ட் நம்மை மீண்டும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. குறித்து வைத்த ஒவ்வொருவரையும் தேடி பழிவாங்கும் படலமாக இரண்டாம் பாதி தொடர்கிறது.