ஓய்வுக்காலத்தில் எனக்கு அது பெரிய தொகையாகத் தெரிந்ததால், வெளியில் குறைவான வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்துக் கிளம்பலாமென முடிவு செய்தேன். அந்த நேரத்தில் நண்பரான நடிகர் சிவகுமார் வீட்டுக்கு வந்தார். ‘ஏன் இப்படிப் பண்றீங்க’ என்றவர், என்னிடம் தெரிவிக்காமலே இந்த விஷயத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு போயிருக்கிறார். மறுநாள் உதயச்சந்திரன் ஐஏஎஸ் பேசி ’நீங்கள் இருக்கும் வரை 4000 ரூபாய் வாடகையிலேயே இருக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்’ என்றார். சிவகுமாரிடம் பேசி கோபித்துக் கொண்டேன். ஆனால் அவருமே நட்புக்காகவே அதைச் செய்தார்.
இருந்த போதும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இந்தச் சலுகை நாளை ஒருவேளை இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறபோது குறுக்கே வந்தால்? எனவே முதல்வர் உத்தரவுபோட்ட 15வது நாளில் அவருக்குக் கடிதம் எழுதினேன்.
‘என்னுடைய பொருளாதரச் சூழல் அறிந்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மிக்க நன்றி. இருந்தாலும் என்னால் இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாததால் வீட்டை அரசிடமே ஒப்படைத்து விடுகிறேன்’ என கடிதம் அனுப்பி விட்டு வீட்டைக் காலி செய்து விட்டேன்.
தற்போது வேறு ஒரு பகுதியில் என்னால் கொடுக்க முடிந்த வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்து வசித்து வருகிறேன். இது தெரியாத சிலர் இன்னும் பழைய சேற்றையே வாரி இறைத்து வருகின்றனர், பாவம், அவர்களது அறியாமையை என்ன சொல்வது?