Doctor Vikatan: அடிக்கடி செல்லப் பிராணிகளிடம் கடி; எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி?

Spread the love

Doctor Vikatan: எங்கள் வீட்டில் 2 நாய்க்குட்டிகளும், 3 பூனைகளும் வளர்க்கிறோம். என் மகனுக்கு 20 வயதாகிறது. அவற்றுடன் விளையாடும்போது வாரா வாரம் அவற்றின் நகங்களால் கீறுகின்றன.

சில நேரங்களில் பற்களும் படுவதுண்டு. காயம் ஆழமாக இருந்தால் டிடி ஊசி போட்டுக்கொள்கிறான். இல்லாவிட்டால் விட்டுவிடுகிறான். எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி போட வேண்டும்? அடிக்கடி போடுவதால் ஆபத்தில்லையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை
தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை

வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளாக இருந்தாலும் அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

ரேபிஸ் நோயைப் பொறுத்தவரை, உடலில் IgG வகை ஆன்டிபாடிகள் எந்த அளவு உள்ளன என்பதைப் பொறுத்தே பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்பட்ட பிறகு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன.

நாய் மற்றும் பூனைக்கடிக்கு டிடி ஊசி போட வேண்டிய அவசியமில்லை. நாய்க்கடிக்கு ‘ஏஆர்வி’ எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின்  தான் போட வேண்டும். இது எல்லா அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை கல்லூரிகள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் போடப்படும். நாய்க்கடிக்கான தடுப்பூசியைப் போடத் தவறினால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ரேபிஸ் நோய் வராமல் தடுக்கவும், ஒருவேளை கடி மிகவும் மோசமாக இருந்தால், இம்யூனோகுளோபுலின் ஊசியும் போட வேண்டியிருக்கும். பல பேர், இது போல நாய்க்கடிக்கு வெறும் டிடி ஊசியை மட்டும் போட்டுக்கொண்டு உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம்.  உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குத் தவறாமல் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுங்கள்.

சிலருக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உருவாகலாம் (Non-responders). இதனால்தான் அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் அல்லது கூடுதல் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த, அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் மூலம் பெருமளவிலான விலங்குகளுக்கு (குறிப்பாக தெருநாய்கள்) தடுப்பூசி போடுவது அவசியம்.

ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த, அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் மூலம் பெருமளவிலான விலங்குகளுக்கு (குறிப்பாக தெருநாய்கள்) தடுப்பூசி போடுவது அவசியம்.

நாய், பூனை கடித்த பிறகு போடுவதைத் தவிர்த்து, முன்னெச்சரிக்கையாக 0, 7, 28 ஆகிய நாள்களில் 3 தவணை தடுப்பூசிகள்  (Pre-exposure Prophylaxis) போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. 

டிடி என்பது டெட்டனஸ் டாக்ஸாயிடு (Tetanus Toxoid) என்பதன் சுருக்கம். டெட்டனஸ் என ஒரு நோய் உண்டு. தமிழில் அதை ‘ரண ஜன்னி’ என்று சொல்வார்கள். சற்றே மோசமான அந்த நோயை ஏற்படுத்தும் கிருமியை வரவிடாமல் தடுப்பதுதான் டிடி ஊசியின் வேலை. இந்தக் கிருமிகள், துருப்பிடித்த ஸ்டீல், கரடுமுரடான மேற்பரப்புகள், மண் தரையிலுள்ள தூசு போன்றவற்றில் அதிகமிருக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் துருப்பிடித்த இடங்களில் பட்டு அடிபட்டால் உடனே டிடி ஊசி போடச் சொல்லி அறிவுறுத்துகிறோம். அப்படித் தடுப்பூசி போடுவது உண்மையிலேயே பாதுகாப்பானது.

ஒவ்வொரு முறை அடிபடும்போதும் அல்லது காயம் ஏற்படும்போதும் டெட்டனஸ் ஊசி போடத் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுக்கொண்டாலே போதுமானது. டிடி ஊசி, ரேபிஸ் தடுப்பூசி- இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *