Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். ஆனாலும் அவரது இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோ செய்ய வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

பைபாஸ் அறுவைசிகிச்சை செய்த அனைவருக்கும் வழக்கமான சோதனையாக (Routine) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் அது அவசியமாகிறது.
அதாவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டாலோ, நடக்கும்போது மூச்சுத்திணறல் அல்லது நெஞ்சுவலியுடன் இடது கை, தோள்பட்டை, முதுகு அல்லது தாடை வலி இருந்தாலோ, இசிஜி (ECG) அல்லது எக்கோ (Echo) சோதனையில் இதயத்தின் பம்ப் செய்யும் திறன் குறைந்திருப்பது தெரிந்தாலோ, டிரெட்மில் டெஸ்ட் (TMT) அல்லது ஸ்ட்ரெஸ் எக்கோ (Stress Echo) சோதனையில் இதய ரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் இருப்பது உறுதியானாலோ, ட்ரோப்போனின் ஐ (Troponin I) என்ற ரத்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்தாலோ, ஆஞ்சியோ செய்ய வேண்டிய தேவை வரலாம். குறிப்பிட்ட இடைவெளியில் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளும்போது, பழைய எக்கோவைவிட புதிதாக எடுக்கப்பட்டதில் பம்ப்பிங் திறன் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அதை உறுதிசெய்ய ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம்.

பைபாஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரத்தக் குழாய்கள் (Grafts) இரண்டு வகைப்படும். ஆர்ட்டீரியல் கிராஃப்ட் (Arterial Graft – LIMA): மார்புப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் இந்தத் தமனியில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு. 10 முதல் 15 ஆண்டுகளில் சுமார் 5 முதல் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இதில் அடைப்பு வரலாம்.
வீனஸ் கிராஃப்ட் (Venous Graft – Saphenous Vein): காலில் இருந்து எடுக்கப்படும் இந்த நாளத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒரு வருடத்தில் 10 முதல் 15 சதவிகிதம் பேருக்கும், 10 ஆண்டுகளில் சுமார் 50 சதவிகிதம் பேருக்கும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இவை தவிர, சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை கொண்டவர்களுக்கும் இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். நோயாளிக்கு எவ்வித நெஞ்சு வலியோ, மூச்சுத்திணறலோ அல்லது மற்ற உடல் உபாதைகளோ இல்லாமல், இசிஜி மற்றும் எக்கோ சோதனைகள் சீராக இருந்தால், டிரெட்மில் டெஸ்ட் நார்மலாக இருந்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யத் தேவையில்லை.
பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதய நோயை முழுமையாகக் குணப்படுத்தும் (Permanent Cure) சிகிச்சை முறை கிடையாது. இது செய்யப்பட்டாலும் ஹார்ட் அட்டாக் வரலாம்.

பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல. இது இதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தற்காலிகமாகச் சரிசெய்து (Palliative), நோயாளியின் நிலையைத் ஓரளவு முன்னேற்றுவதற்கான (Stabilize) அவசர கால உதவி மட்டுமே. அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது மீண்டும் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னும் மீண்டும் பிரச்னை வராமல் தடுக்க சில கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். ரத்த அழுத்தம் (BP), சர்க்கரைநோய் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்த உறைவைத் தடுப்பதற்கான மருந்துகளை மருத்துவர் அறிவுரைப்படி தவறாமல் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். முறையான மற்றும் அளவான உடற்பயிற்சி அவசியம். மன அமைதியுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.