இதன் பின்னணி குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட வருவாய்த்துறையினர், “தேவாலா மலைப்பகுதியில் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோத தங்க சுரங்கங்கள் இயங்கி வருவதை சமீபத்திய கள ஆய்வுகள் மூலம் கண்டறிய முடிந்தது. பெரிய அளவிலான சுரங்கங்களைத் தோண்டி தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த தங்க கடத்தல் கும்பல் மூலம் மலப்புறம் பகுதிக்கு இந்த தங்கங்களை ரகசியமாக கடத்திச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பல ஆண்டுகளாக சட்டவிரோத தங்க சுரங்கங்கள் சிறிய அளவில் இயங்கி வந்துள்ளன. ஆனால், தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் காரணத்தால் தங்க மாஃபியா கும்பல்கள் பலவும் கூடலூர் தங்க சுரங்கங்கள் மீது தீவிரம் காட்டி வருகின்றன.

போதைப்பொருள்களுக்கு உள்ளுர் மக்களை அடிமையாக்கி ஆபத்தான தங்கம் எடுக்கும் வேலையில் இரவு நேரங்களில் ஈடுபடுத்தி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தங்க சுரங்கங்களை மூடுவது உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.