Ind v Eng : 'பயந்துட்டியா.. உயிரே போயிடுச்சு!' – வெளுத்துக்கட்டிய பெத்தேல்; போராடி வென்ற இந்தியா!

Spread the love

வான்கடேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருந்தது. இங்கிலாந்து வீரர் பெத்தேல் தனது அநாயசமான அதிரடியால் பயம் காட்டினாலும், இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது

Bethell
Bethell

254 ரன்கள் டார்கெட் என்பது எப்பேர்பட்ட பேட்டிங் பிட்ச்சாக இருந்தாலும் அசாத்தியமான டார்கெட்தான். அந்த டார்கெட்டை நோக்கி இங்கிலாந்து ஆரம்பத்திலிருந்தே புயல் வேகத்தில் புறப்பட்டது. சால்ட், ப்ரூக், பட்லர் என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டை பவர்ப்ளேக்குள்ளாகவே இங்கிலாந்து இழந்திருந்தாலும், ரன்ரேட்டில் எந்த குறைவும் வைக்காமல் தொடர்ந்து அடித்தே ஆடினர்.

குறிப்பாக, ஜேக்கப் பெத்தேல் ஒரு முனையில் நின்று கொண்டு இந்திய பௌலர்களை மிரளவிட்டார். வருண் சக்கரவர்த்தியை பெரும்பாலான பேட்டர்களால் எளிதில் சமாளிக்க முடியாது. ஆனால், பெத்தேல் அவர் ஓவரில் அநாயசமாக மூன்று சிக்சர்களை பறக்கவிட்டார். டாம் பேண்டன், வில் ஜாக்ஸ் ஆகியோரும் பெத்தேலுக்கு இணையாக நின்று அடித்து ஆடினார். 7-14 இந்த மிடில் 8 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 104 ரன்களை சேர்த்திருந்தது. அர்ஷ்தீப் சிங் விடாப்பிடியாக ஒயிடாக வீசி வீசி வம்பிழுக்க அதற்கு பேட்டை விட்டு பவுண்டரில் லைனில் அக்சரால் கச்சிதமாக கேட்ச் பிடிக்கப்பட்டு 35 ரன்களில் வில் ஜாக்ஸ் வெளியேறினார்.

Jacks
Jacks

கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டது. சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த பெத்தேலும் சாம் கரனும் களத்தில் நின்றனர். பும்ராவுக்கு 2 ஓவர்கள் இருந்தது. 16 வது ஓவரையே அவருக்கு கொடுத்தார் சூர்யா. இந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரியை மட்டும் கொடுத்து 8 ரன்களுக்குள் பும்ரா கட்டுப்படுத்தினார். ஸ்லோயர் ஒன்களை பிரதான ஆயுதமாக பயன்படுத்தினார். அர்ஷ்தீப் சிங் 17 வது ஓவரை வீசினார். அர்ஷ்தீப் டைட்டாக வீச முயன்றும் பெத்தேல் பவுண்டரியும் சிக்சரும் அடித்து ஓவரில் 16 ரன்கள் வர காரணமாக இருந்தார். 18 வது ஓவர் மீண்டும் பும்ராவுக்கு.

அவரின் கடைசி ஓவர் இது. டைட்டாக யார்க்கிங் லெந்தில் வீசவே பும்ரா முயன்றார். அது ஒர்க் அவுட்டும் ஆனது. பும்ராவின் இந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவை.

19 வது ஓவரை ஹர்திக் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அடித்து சதத்தை நிறைவு செய்தார் பெத்தேல். அதிரடியாக இந்த ஓவர் ஆரம்பித்திருந்தாலும், யார்க்கிங் லெந்தில் வீச முயன்று நன்றாகவே இந்த ஓவரை வீசி முடித்தார் ஹர்திக். சாம் கரணின் விக்கெட்டும் கிடைத்தது. வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

Bethell
Bethell

.

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை. பெத்தேல் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. அவர்தான் அந்த ஓவரை வீசியிருக்க வேண்டும். ஆனால், சூர்யா துபேவை உள்ளே கொண்டு வந்தார். ஸ்லோவாக வீசப்பட்ட முதல் பந்தையே நேராக லாங் ஆபில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயன்றார் பெத்தேல். ஹர்திக்கின் துடிப்பான பீல்டிங்கால் ரன்னை நிறைவு செய்ய முடியாமல் பெத்தேல் ரன் அவுட். ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் துள்ளிக் குதித்தது. இங்கிலாந்தின் கதை அத்தோடு முடிந்தது. இந்திய அணி வென்றது.

மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இறுதிப்போட்டி. நியூசிலாந்து அணி இந்திய ரசிகர்களுக்கு பல அதிர்ச்சிகளை இதற்கு முன் கொடுத்திருக்கிறது. அதெற்கெல்லாம் பதிலடியை இந்தியா கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *