IND vs SA: "களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்"- ஆட்டநாயகன் கோலி

Spread the love

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ.30) ராஞ்சியில் நடைபெற்றது.

IND vs SA
IND vs SA

இதில், 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

அதிரடி சதமடித்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விராட் கோலி, “ஆட்டத்திற்குள் நல்ல மனநிலையுடன் நுழைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

முதல் 20-25 ஓவர்கள் வரை பிட்ச் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. எனவே நான் வேறு எதையும் யோசிக்காமல், மைதானத்துக்கு சென்று பந்தை அடித்தாலே போதும் என்று முடிவு செய்தேன்.

என்னுடைய கிரிக்கெட் முழுவதும் மனரீதியானது. நான் தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன். அது இப்போது கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல, அதுவே என் வாழ்க்கை முறையாகிவிட்டது.

இங்குள்ள கண்டிஷனைப் புரிந்து கொள்ள ராஞ்சிக்கு முன்கூட்டியே வந்துவிட்டேன். பகலிலும், இரவிலும் பயிற்சி செய்தேன். போட்டிக்கு முந்தைய நாள் முழு ஓய்வு எடுத்தேன்.

விராட் கோலி
விராட் கோலி

எனக்கு இப்போது 37 வயதாகிறது. அதனால் சோர்வில் இருந்து மீள்வது மிகவும் முக்கியம். நான் எங்கு வந்தாலும், களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்.

கடந்த 15-16 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் ஆடிவிட்டேன்.

வலைப்பயிற்சியில் இடைவேளை இல்லாமல் என்னால் 2 மணி நேரம் பேட்டிங் செய்ய முடிந்தால், என் உடல் தகுதி சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.

அனுபவம் இருக்கும்போது, ஃபார்ம் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை” என்று உத்வேகமாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *