நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்து தொடரில் நாயருக்குக் குறுகிய காலமே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தொடரில், பேட்டிங் வரிசையில் அவர் மூன்றாவது இடம் மற்றும் ஆறாவது இடத்திற்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார்.
முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ-யின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்டபோது, அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்த்ததாக ஒப்புக்கொண்டார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறியிருக்கும் இந்தச் சூழலில், சாய் சுதர்சன், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களைப் பயன்படுத்தாமல், இந்தத் தொடரில் இந்தியாவின் நிலையைப் பொறுத்து, கருண் நாயர் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், அது இந்திய அணிக்குச் சிறப்பாக இருந்திருக்குமோ? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்புகின்றனர்.
ஏனெனில், தற்போது சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக ‘ஒயிட்வாஷ்’ ஆகும் அபாயத்தை இந்தியா எதிர்கொள்வதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் இழக்கும் நிலையில் உள்ளது.