Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' – பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்துக்கு என்ன பிரச்னை?

Spread the love

இந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இண்டிகோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

நேற்றுமட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் 10 மணி நேரம் வரை தாமதமானது. இந்தச் சிக்கல்களால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

IndiGo - இண்டிகோ
IndiGo – இண்டிகோ

சரியான நேர செயல்திறன் என்ற வகையில், அக்டோபர் மாதம் 84.1%, நவம்பர் மாதம் 67.7% எனக் குறையத் தொடங்கியது. இந்த மாதம் 2-ம் தேதி அது 35% எனக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களையும் விட இது மிகவும் குறைவு.

தினசரி 2,200+ விமானங்களில் 65% தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டவையாகவோ உள்ளன. கடந்த நவம்பர் மாதம் மட்டும் பைலட் பற்றாக்குறையால் மொத்தம் 1,232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இன்று பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 73 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

மும்பை விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “மும்பை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் சில இண்டிகோ விமானங்கள், அந்நிறுவனத்தின் செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக தாமதங்கள் அல்லது ரத்துகளைச் சந்திக்க நேரிடும். எனவே, இண்டிகோவில் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்களின் பயண விவரங்களை விமான நிறுவனத்துடன் சரிபார்த்துக்கொள்ளவும்” என அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகள் இண்டிகோ நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் சலசலப்பான சூழல் ஏற்பட்டது.

IndiGo - இண்டிகோ
IndiGo – இண்டிகோ

இண்டிகோவுக்கு என்ன பிரச்னை?

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடந்த மாதம் திருத்தப்பட்ட விமான கடமை நேர வரம்பு (FDTL – Flight Duty Time Limitation) விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, விமானிகள் மற்றும் கேபின் குழுவினர்கள் ஒரு நாளுக்கு 8 மணிநேரம், வாரத்திற்கு 35 மணிநேரம், மாதத்திற்கு 125 மணிநேரம், வருடத்திற்கு 1,000 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விமானிகள் மற்றும் கேபின் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், விமான நேரத்தின் இருமடங்கு ஓய்வு நேரத்தைப் பெற வேண்டும். எந்தவொரு 24 மணி நேர பயணத்திலும் குறைந்தபட்சம் 10 மணி நேர ஓய்வு இருக்க வேண்டும்.

பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதற்காக DGCA கொண்டு வந்த இந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருகிறது.

குறிப்பாக, புதிய பணி விதிமுறைகளுக்குப் பிறகு பணியாளர்கள் மற்றும் விமானிகள் பற்றாக்குறையை இண்டிகோ நிறுவனம் எதிர்கொள்கிறது. இதுவே இண்டிகோ விமான சேவை பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாகும்.

இண்டிகோ
இண்டிகோ

இதுபற்றி இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த இரண்டு நாள்களாக இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் முழுவதும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

சிறிய தொழில்நுட்ப கோளாறுகள், குளிர்காலத்துடன் தொடர்புடைய அட்டவணை மாற்றங்கள், பாதகமான வானிலை, திருத்தப்பட்ட விமான நேர வரம்பு விதிமுறைகளைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல எதிர்பாராத செயல்பாட்டு சவால்கள் எங்கள் செயல்பாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.

எங்கள் செயல்பாடுகளை இயல்பாக்கவும், நெட்வொர்க் முழுவதும் எங்கள் நேரத்தை படிப்படியாக மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும். வாடிக்கையாளர்களின் அசௌகரியத்தைக் குறைக்கவும், செயல்பாடுகள் விரைவாக நிறைவு பெறுவதை உறுதி செய்யவும் எங்கள் குழுக்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *