இந்த மினி ஏலத்திலிருந்து வெளிநாட்டு வீரர்களுக்கென ஒரு புதிய விதிமுறையையும் பிசிசிஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது. “Maximum Fee Rule’ என பிசிசிஐ இதை குறிப்பிடுகிறது. அதன்படி எந்த வெளிநாட்டு வீரரும் மினி ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்க முடியாது. அதாவது, கடந்த மெகா ஏலத்தின் போது வீரர்களை தக்கவைக்க 18 கோடி ரூபாயை உச்சபட்ச தொகையாக பிசிசிஐ நிர்ணயித்தது. இதை ஒரு அளவுகோலாக எடுக்கிறார்கள். அதேமாதிரி, கடந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்குப் போன வீரரின் தொகையை எடுத்துக் கொள்கிறார்கள்.
அதன்படி ரிஷப் பண்ட் கடந்த மெகா ஏலத்தில் 27 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார். இந்த இரண்டு தொகையில் எது குறைவான தொகையோ அதுதான் மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் பெறும் உச்சபட்ச சம்பளமாக இருக்க வேண்டும். அதன்படி இந்த மினி ஏலத்தில் எந்த வெளிநாட்டு வீரரும் 18 கோடிக்கு மேல் வாங்க முடியாது. இதில் ஒரு சந்தேகமும் எழும். எனில், எந்த அணியும் வெளிநாட்டு வீரரை 18 கோடிக்கு மேல் ஏலம் கேட்காதா என்றும் தோன்றும். ஏலம் கேட்கும் போது அணிகள் வழக்கம் போல கேட்கலாம்.
ஒரு அணி ஒரு வெளிநாட்டு வீரரை 25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கிறது எனில், அந்த 25 கோடி ரூபாய் அந்த அணியின் கையிருப்புத் தொகையிலிருந்து கழிக்கப்படும். ஆனால், 18 கோடி ரூபாய் மட்டுமே அந்த வீரருக்கு வழங்கப்படும். மீதமுள்ள 7 கோடி ரூபாய் பிசிசிஐயின் அறக்கட்டளைக்கு சென்றுவிடும். ஆக, அபுதாபியில் ஏலத்துக்கு வரும் எந்த வெளிநாட்டு வீரருக்கும் 18 கோடிக்கு மேல் க்ரெடிட் ஆகாது!