Iran: மீண்டும் தொடங்கும் ஈரான் உறவு; 5 ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்யும்

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் களைய, இந்தியா மீண்டும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தத் தகவலை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் முதல் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், தற்போதைய அமெரிக்கா-இஸ்ரேல் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்
ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்

உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடான இந்தியாவுக்கு இது பெரும் சவாலாக அமைந்தது. இந்தச் சூழலைச் சமாளிக்க, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இதர எரிபொருட்களை இறக்குமதி செய்ய இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளன. ஈரான் எண்ணெய்க்கான பணப் பரிமாற்றத்தில் தற்போது எந்தச் சிக்கலும் இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

வரவிருக்கும் மாதங்களுக்கான கச்சா எண்ணெய் தேவையை இந்தியா முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

இந்தியா
இந்தியா

வணிக ரீதியான லாபம் மற்றும் தேவையைப் பொறுத்து வெவ்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கும் முழு சுதந்திரம் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் மட்டுமின்றி, ஈரானிடமிருந்து 44,000 மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவும் (LPG) இந்தியா வாங்கியுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பல் கடந்த புதன்கிழமை மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், தற்போது எரிபொருளை இறக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *