Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது.

நேற்று (28-ம் தேதி) அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், சுமார் 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்டுள்ள ஒரு வலிமையான படைப்பிரிவின் முதன்மைக் கப்பலாகும்.

யுஎஸ்எஸ் திரிபோலி
யுஎஸ்எஸ் திரிபோலி

இதில் அதிநவீன F-35 போர் விமானங்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் ஆஸ்ப்ரே (Osprey) ரக விமானங்கள் எனப் பெரும் ஆயுதக் கிடங்கே தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (United States Central Command – CENTCOM) தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை, “நவீனப் போர்முறையில் தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்காமல், அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும். ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அல்லது அதன் ராணுவத் திறனை முடக்கப் பல வழிகள் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துத் தெளிவான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுமார் 10,000 வீரர்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்ப அதிபர் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திரிபோலி போர்க்கப்பலின் வருகை இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *