மும்பை மேயர் ரிது தாவ்டே மும்பை போரிவலி பகுதியில் நடந்த ஜெயின் மத விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் டாக்டர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
ரிது தாவ்டே இவ்விழாவில் பேசுகையில், “‘கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தீராத தொண்டை பிரச்னையால் அவதிப்பட்டு வந்தேன். டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்தும் பலனலிக்கவில்லை. இதையடுத்து ஜெயின் மதகுரு ஒருவரிடம் சென்றேன். அவரிடம் டாக்டர்களால் கூட எனது தொண்டை பிரச்னையை சரி செய்ய முடியவில்லை என்று சொன்னேன். அவர் எனக்காக பிரார்த்தனை செய்தார்.
அவரது ஆசிர்வாதத்தாலும் அதிசயத்தாலும் எனக்கு இப்போது பேசுவது போன்று பேச முடிந்தது. எனக்கு இருந்த தொண்டை பிரச்னை சரியாகிவிட்டது. இப்போது நீங்கள் கேட்கும் எனது சத்தம் முன்பு உள்ளது கிடையாது”என்று தெரிவித்தார்.
இதில் மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா கலந்து கொண்டு பேசுகையில்,”ஜெயின் மதகுரு நம்ரமுனியைச் சந்தித்த பிறகு, ரிது தாவ்டே ஒரு மாநகராட்சி உறுப்பினராகவும், இறுதியில் மும்பையின் மேயராகவும் உயர்ந்தார்.
அவர் ஏற்கனவே ஒரு அற்புதத்தைப் பற்றிப் கூறினார். ஆனால், மற்றொரு அற்புதமும் நிகழ்ந்துள்ளது. நம்ரமுனியைச் சந்தித்த பிறகு, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமித் ஷா ஆகியோரின் ஆசியுடன் அவர் மேயராகப் பொறுப்பேற்றார்,” என்று அதே நிகழ்வில் லோதா கூறினார். இதனை சிவசேனா (உத்தவ்) கிண்டல் செய்துள்ளது. அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், மேயரின் அதிசய குணமடைதலை, சமீபத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜோதிடர் அசோக் கராத் போன்ற நபர்களுடன் ஒப்பிட்டு, சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.