கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் பிந்து என்ற ஊர்மிளா. இவர் மோகன்ராவ் என்பவருடன் லின் இன் முறையில் வசித்து வந்தார். இதில் பிந்து மற்றும் மோகன்ராவ் ஆகிய இருவரும் ஏற்கனவே திருமணமாகி தங்களது துணையை பிரிந்தவர்கள் ஆவர்.
அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் தங்களை கணவன் மனைவி என்று வீட்டு உரிமையாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சமீபத்தில் வினய் என்பவரை பிந்து சந்தித்தார். அவர்கள் இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்ததாக தெரிகிறது.
இதனால் பிந்து வினயை திருமணம் செய்ய திட்டமிட்டார். இது குறித்து பிந்து மோகன்ராவிடம் தெரிவித்தார். ஆனால் அவர்களது திருமணத்திற்கு மோகன்ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பிந்து தான் வினயை திருமணம் பிடிவாதமாக இருந்தார்.

இதனால் வினயும், பிந்துவும் சேர்ந்து மோகன்ராவை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக வினய் தனது நண்பர் தனுஷ் என்பவரின் உதவியை நாடினார். தனுஷ் ஏற்கனவே ஹோட்டல் தொழில் ஆரம்பித்து நஷ்டப்பட்டு இருந்தார்.
எனவே இக்கொலைக்கு உதவி செய்தால் பணம் கொடுப்பதாக வினய் தெரிவித்தார். பணத்திற்கு ஆசைப்பட்டு தனுஷ் இக்கொலைக்கு உதவி செய்வதாக தெரிவித்தார். அவர்கள் மோகன்ராவிற்கு மது பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். பிந்துவும், மோகன்ராவும் வசித்து வந்த வீட்டில் இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வாயில் டேப் ஒட்டிய நடிகை
இதில் மோகன்ராவ் அளவுக்கு அதிகமாக குடித்தவுடன் வினயும், அவரது நண்பர் தனுஷும் சேர்ந்து மோகன்ராவை கத்தியால் குத்தினர். இதில் மோகன் ராவ் கத்தினார். உடனே அருகில் இருந்த பிந்து மோகன்ராவ் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டினார். கத்திக்குத்து காயம் மற்றும் மூச்சுவிட முடியாமை போன்ற காரணங்களால் மோகன்ராவ் இறந்துவிட்டார்.
அவரை அப்படியே போட்டுவிட்டு பிந்துவும் மற்றவர்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட்டனர். கொலை நடந்து 10 நாட்களுக்கும் மேலான நிலையில் அந்த வீட்டில் இருந்து வந்த கெட்ட வாசனையை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது மோகன்ராவ் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி பிந்து, வினய், தனுஷ் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில் எப்படி கொலை செய்தோம் என்ற விபரத்தை பிந்து விரிவாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.