நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பேசினார். “இரண்டு ஆண்டுகளாக என்னையும் எனது குடும்பத்தையும் சிதைக்கப் பார்த்தார்கள். நான் ஒரு ஊழல்வாதி என்று நாட்டு மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். இன்று நீதிமன்றம் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. எனது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி இது. சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன, உண்மை வெளிவந்தது. இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கான வெற்றி” என உணர்ச்சி பெருக்குடன் பேசினார்
தொடர்ந்து பேச முடியாமல் அவர் வெடித்து அழுதார், “பழிவாங்கும் அரசியலுக்குப் பலியாகி நான் சிறையில் இருந்தபோது, டெல்லி மக்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையே என்னை இன்று விடுவித்துள்ளது,” என்றார்.

சுனிதா கெஜ்ரிவாலின் உருக்கமான பதிவு
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், “சத்தியமே வெல்லும் (Satyamev Jayate). இந்த உலகில் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், சிவ சக்திக்கு மேல் யாரும் கிடையாது,” என்று பதிவிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆம் ஆத்மி கட்சியின் கொண்டாட்டங்கள்
தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் வீதிகளில் இறங்கிக் கொண்டாடத் தொடங்கினர்.டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடினர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, “நமது சிங்கம் மீண்டும் வந்துவிட்டது” என்ற முழக்கங்கள் கேட்க ஆரம்பித்தது. நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் கிளைகளில் இனிப்புகள் வழங்கப்பட்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டின.
அரசியல் முக்கியத்துவம்
இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு மிகப்பெரிய புத்துயிரைத் தந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டது கெஜ்ரிவாலுக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ‘ஊழல்’ கறை நீக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். “உண்மை ஒருபோதும் தோற்காது” என்ற வாசகத்துடன் ஆம் ஆத்மி கட்சி தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.!