பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம் கோரும் விஷயங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார் பசுபதி. மனதளவில் பதற்றமிருந்தாலும் அதனை முகத்தில் காட்டிவிடாமல் கட்டுப்படுத்தும் இடத்திலும், தான் செய்த தவற்றை உணர்ந்து இரும்பாகி நிற்கும் இடத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட் என நிரூபித்திருக்கிறார் பசுபதி.
பொறுமை, ஆற்றாமை, அப்பாவித்தனம் என தன் கதாபாத்திரத்திற்குச் சகல உணர்வுகளையும் தந்திருக்கிறார் விதார்த். காவல் துறையில் இருக்கும் அதிகாரப் படிநிலைகளின்படி, உயரதிகாரிகள் அவர்களைவிடப் பதவி குறைந்தவர்களைப் பயன்படுத்துவதையும், அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தங்களையும் பிரதிபலிப்பவராக நடிப்பில் பரிதாபங்களைச் சம்பாதித்து, ஸ்டார்களை வாங்கிக் குத்திக்கொள்கிறார். வெல்டன் விதார்த்!

பாஸ்கரனின் துணைவியாக வரும் லிசி ஆண்டனி பயத்துடனும் பதைபதைப்புடனும் சீரிஸின் இறுதி வரை நடித்து, கதாபாத்திரத்தைப் பொறுப்பாகக் கரை சேர்க்கிறார்.
மகளை எண்ணி ஏங்கும் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, தன் நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை அழுத்தமானதாக மாற்றியிருக்கிறார். அதுவும் ‘மெர்சி எங்க போனா மெர்சி, எப்போ வருவ!’ எனத் துயரமிகுந்த வசனத்தைப் பேசும் இடங்களில் பார்ப்போர் இதயங்களைக் கனமாக்கிவிடுகிறார்.
இவர்களைத் தாண்டி ஜெயக்குமார், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, மறைந்த நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.