இன்று (பிப்.2) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.-பியுமான ராகுல் காந்தி, 2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதி வெளியிடப்படாதப் புத்தகம் குறித்த ஒரு பத்திரிகைக் கட்டுரையை கையில் ஏந்தியபடி பேசத் தொடங்கியிருக்கிறார்.
இது பாஜக தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகுல் காந்தி அந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டத் தொடங்கிய உடனேயே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு, வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவது சபையின் விதிகளுக்கு எதிரானது என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பதறிய பாஜக
“முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது தொடர்பாக ராணுவ தளபதி நரவனே எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட விடாமல் அரசு தடுக்கிறது” என்று ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராக பேச முற்பட்டப்போது, அவரது மைக் அணைக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.