மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆஞ்சலின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வதந்தியை நம்பிய ஆஞ்சலின் சகோதரர்களும், அவருடைய தந்தையும் சக்ஷம் டேட்டைக் கொடூரமாகத் தாக்கி, சுட்டுக் கொலை செய்து, சக்ஷம் டேட்டின் தலை அடையாளம் தெரியாதவாறு நசுக்கியிருக்கின்றனர். இந்தக் கொடூரச் செயலால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சக்ஷம் டேட் கொலை செய்யப்பட்டதை அறிந்த ஆஞ்சல், தனது குடும்பத்தாரிடமிருந்து தப்பித்து, சக்ஷம் டேட்டின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்துக்குச் சென்றிருந்தார். அங்கு, அவருடைய முகத்திலும் உடலிலும் மஞ்சள் பூசி, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு, சக்ஷம் டேட்டின் சடலத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.