தெலங்கானா அரசு சமீபத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. தெலங்கானாவின் மின் துறையில் மூத்த பொறியாளராக இருக்கும் நபருக்கு மாதம் ரூ.7 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதே போன்று ஐதராபாத்தில் மூத்த துப்புரவு தொழிலாளியாக இருக்கும் ஒருவரின் சம்பளம் 2 லட்சத்தை தொட்டுள்ளது. 2014ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து அடுத்தடுத்து வந்த தேர்தல் காரணமாக சம்பளம் அதிகரித்துக்கொண்டே சென்றது.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் ஊழியர்களின் சம்பளம் கிடுகிடுவென அதிகரித்து இருக்கிறது. ஐதராபாத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிபவர்களின் சராசரி சம்பளம் ரூ.70 ஆயிரமாக இருக்கிறது.

புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு ரூ.28 ஆயிரமும், மூத்த துப்புரவு தொழிலாளிக்கு ரூ.2 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது. தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமாக ரூ.6 ஆயிரம் கோடியை வழங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த அளவுக்கு சம்பளமாக வழங்கப்பட்டாலும், மாநில அரசின் வருவாயும் கணிமாக அதிகரிப்பதால் நிலையை அரசு சமாளித்து வருகிறது. மாநில அரசு மொத்த உருவாயில் 45 சதவீதத்தை ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்காக செலவிடுகிறது. தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருக்கிறது. அதோடு தெலங்கானா மக்களின் சராசரி வருமானம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் ரூ.2.30 லட்சம் கோடியாக இருந்தது. செலவு ரூ.2.27 லட்சம் கோடியாக இருந்தது. பட்ஜெட்டில் கல்விக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.