MQ-4C Triton : ஹோர்முஸ் வளைகுடாவில் அமெரிக்காவின் ரூ.1,600 கோடி மதிப்பிலான உளவு டிரோன் திடீர் மாயம்!

Spread the love

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, சுமார் 200 மில்லியன் டாலர் (ரூ.1600 கோடிக்கு மேல்) மதிப்புள்ள MQ-4C டிரைட்டன் (Triton) என்ற அதிநவீன உளவு டிரோன், அவசரக்கால சமிக்ஞையை அனுப்பிய சில நிமிடங்களில் மர்மமாக மறைந்துள்ளது.

drone
drone

இந்த சம்பவம் வளைகுடா பகுதியில் மீண்டும் ஒரு ராணுவ மோதலுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் வளைகுடா பகுதிகளில் சுமார் மூன்று மணி நேர கண்காணிப்புப் பணியை முடித்துவிட்டு, இத்தாலியில் உள்ள சிகோனெல்லா கடற்படை விமானத் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த டிரோன் மாயமாகியுள்ளது.

ஆன்லைன் விமான கண்காணிப்புத் தளமான ‘ஃபிளைட் ராடார் 24’ (Flightradar24) வெளியிட்ட தரவுகளின்படி, டிரோன் ‘கோட் 7700’ என்ற பொது அவசரக்கால சமிக்ஞையை அனுப்பியுள்ளது.

சமிக்ஞை அனுப்பப்படுவதற்கு சற்று முன்பு, டிரோன் ஈரான் வான்பரப்பை நோக்கி இலேசாகத் திரும்பியதாகவும், பின்னர் மிக வேகமாக உயரத்தைக் குறைத்து, ராடார் கண்காணிப்பில் இருந்து மறைந்ததாகவும் அந்தத் தரவுகள் காட்டுகின்றன.

இந்த டிரோன் தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்து நொறுங்கியதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவான தகவலும் இல்லை. அமெரிக்க கடற்படையோ அல்லது பென்டகனோ இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

MQ-4C டிரைட்டன்: அமெரிக்க வான்வழி கண்கள்

அமெரிக்க ராணுவத்தின் மிக விலையுயர்ந்த ஆளில்லா விமானங்களில் ஒன்றான MQ-4C டிரைட்டன், ஒரு சாதாரண டிரோன் அல்ல. இது உயர் Altitude, நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட (High Altitude, Long Endurance – HALE) ஒரு சுயசார்பு விமானமாகும்.

50,000 அடிக்கும் அதிகமான உயரத்தில், தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் ஆற்றல் கொண்டது. இதன்மூலம், சுமார் 7,400 நாட்டிகல் மைல் தொலைவிற்கு கடல் பகுதிகளை இடைவிடாமல் கண்காணிக்க முடியும். P-8A போஸிடான் ரோந்து விமானங்களின் ‘வானத்தில் உள்ள கண்களாக’ செயல்பட்டு, கடலில் உள்ள கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டங்கள் குறித்த நிகழ்நேர தகவல்களை வழங்குவதே இதன் முக்கியப் பணியாகும்.

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு விழுந்த அடியா?

இந்த டிரோன் காணாமல் போன நேரம், புவிசார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. போரைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் வளைகுடாவை வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரான்- அமெரிக்கா
ஈரான்- அமெரிக்கா

இந்த மர்மமான நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையே உருவான மெல்லிய நம்பிக்கையைச் சிதைத்து, மீண்டும் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்க கடற்படையிடம் 20 டிரைட்டன் டிரோன்கள் இருந்ததாகவும், மேலும் ஏழு டிரோன்களை வாங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *